;
Athirady Tamil News

கருகும் இலங்கையும் கைகூடாத தீர்வுகளும்

0

ராஜகோபால் யசிஹரன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாம் ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். மார்ச் மாத இறுதியில் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) வெளியிட்ட ‘2025 உலகளாவிய காலநில’ அறிக்கை; நாம் ஒரு காலத்தில் நம்பிக்கையாகக் கணித்த பருவங்களின் தன்மை முற்றாகச் சிதைந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது.

இது ஒரு சாதாரண அறிவியல் தரவு அல்ல; மாறாக, இயற்கை அன்னை மனித நாகரிகத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டும். நாம் இப்போது தொடர்ச்சியாகப் பதினொரு ஆண்டுகளாக அதிகரித்த வெப்பத்தை அனுபவித்து வருகிறோம். இது பூமியின் இயற்கையான குளிர்ச்சியூட்டும் அரண்களை முற்றிலுமாக வற்றச் செய்துள்ளதுடன், துருவங்கள் உருகுவது முதல் மலைப்பிரதேசங்கள் கடும் வறட்சியைச் சந்திப்பது வரை பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தது போல, நாம் இப்போது அவசர நிலையில் இருக்கும் ஒரு கோளின் ‘சிவப்பு நிற இதயத்துடிப்பை’ (Red-flashing heartbeat) அவதானித்து வருகிறோம்.

இந்த உலகளாவிய காய்ச்சல், ஆசியாவை ஒரு ஆபத்தான சுழற்சிக்குள் தள்ளியுள்ளது. பில்லியன் கணக்கான உயிர்களைத் தாங்கி நிற்கும் இமயமலைத் தொடர், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் பனித் தடிமனை இழந்து பின்வாங்குகிறது; இது நமது கூட்டு எதிர்காலத்தையே ஆவியாக்குகிறது. பாகிஸ்தானின் சமவெளி முதல் பங்களாதேஷின் நீரேந்து பகுதிகள் வரை, மக்கள் தற்போது விசித்திரமான வானிலை மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது, மாதக்கணக்கிலான வறட்சி — ஒரு நொடியில் பேரழிவு தரும் திடீர் வெள்ளத்தால் சிதறடிக்கப்படுகிறது!

இலங்கையைப் பொறுத்தவரை, 2026ஆம் ஆண்டின் தரவுகள் நமது உயிர்நாடியான விவசாயத் துறை ஒரு முறையான நெருக்கடியைச் சந்திப்பதை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து, தற்போதைய விளைச்சல் பாரிய வீழ்ச்சியை நோக்கிப் போராடுகிறது. மண்ணில் நீர் தேங்குவதும், அதனைத் தொடர்ந்து இளம் பயிர்கள் வேரூன்றுவதற்கு முன்பே அவற்றைக் கொல்லும் ‘வெப்ப அதிர்ச்சியும்’ (Heat Shock) இணைந்து இந்தத் தோல்வியை உருவாக்கியுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில்தான், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறவுள்ள எட்டாவது உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) பேரவை மிக முக்கியத்துவம் பெறுகிறது. Earth Journalism Network (EJN) ஆதரவுடன் நடைபெறும் இந்தப் பேரவை, இலங்கையைப் போன்ற நலிவடைந்த நாடுகளுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத்தருவதற்கான ஒரு கவசமாகச் செயல்படவுள்ளது.

186 நாடுகளை ஒன்றிணைக்கும் இந்தப் பேரவை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நிதியொதுக்கீட்டைத் தீர்மானிப்பதுடன், இயற்கையை மையமாகக் கொண்ட தீர்வுகளை அமுல்படுத்த வழிவகுக்கும். இது வெறும் அரசியல் சந்திப்பு அல்ல; மாறாக, எமது அழிந்துவரும் பவளப்பாறைகளையும், வற்றும் நீரோடைகளையும் மீட்பதற்கான ஒரு சர்வதேசப் போர்முனை எனலாம். இலங்கையின் விவசாயம் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்குத் தேவையான ‘நீல நிதி’ (Blue Finance) மற்றும் தழுவல் திட்டங்களைச் சர்வதேசத் தளத்திற்குக் கொண்டு செல்ல இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

உயிர்வாழ்வதற்கு, நாம் எவ்வாறு ஆட்சி செய்கிறோம் என்பதில் ஒரு தீவிரமான மாற்றம் தேவைப்படுகிறது. ஒரு பயிர் அழிந்த பிறகு இழப்பீடு வழங்கும் பழக்கத்திலிருந்து விலகி, தேசிய தாங்குதிறனுக்கான ஒரு செயலூக்கமான திட்டத்தை நோக்கி நகர வேண்டும். காலநிலை அவசரநிலை என்பது தற்போதைய பொருளாதார யதார்த்தம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

2030ஆம் ஆண்டை நோக்கி நாம் நகரும்போது, வெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உவர் எதிர்ப்புத் திறன் கொண்ட விதைகள், நுண்-நீர்ப்பாசனம் மற்றும் நிகழ்நேர தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறைகளை நாம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். நிவாரணம் தேடுவதிலிருந்து விலகி, பேரழிவைத் தடுப்பதற்கு நாம் மாறவில்லை என்றால், ‘உணவுப் பாதுகாப்பு’ என்பது ஒரு எட்ட முடியாத ஆடம்பரமாக மாறும்.

நாம் இனி புயல் வருவதற்காகக் காத்திருக்கவில்லை; நாம் புயலின் மையத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம்! அதைத் தாங்கும் ஒரு புகலிடத்தை உருவாக்குவதே எமது ஒரே வழி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.