;
Athirady Tamil News

வறிய மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுக்கு உரமிடும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டு

0
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் இணைந்து சங்காரவேல் நிதியமானது, உயர்தர விஞ்ஞானத்துறையில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லாத தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. வசதி வாய்ப்பற்ற, உயர்தர விஞ்ஞானத்துறையில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளில் கணித, உயிரியல் பிரிவுகளில் கற்க ஆர்வமுள்ள மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன் ஒரு கட்டமாகவே, உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களுக்கான நேரடி ஆய்வுகூடப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான களமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது வளங்களை இம்மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கான மூன்று நாள் விசேட ஆய்வுகூட முகாமில், இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்கும் 155 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் சில ஆசிரியர்களும் வருகை தந்துள்ளனர். மாணவர்களுக்கான இந்தப் பயிற்சிகளை, இந்துக் கல்லூரி ஆசிரியர்களுடன் இணைந்து, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட, தேசிய மட்டங்களில் அதிவிசேட பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை படைத்த பழைய மாணவர்களும் முன்னெடுத்துள்ளமை இம்முகாமின் சிறப்பம்சமாகும். இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் சங்காரவேல் நிதியம் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இம்மாணவர்கள் தமது ஆய்வுகூடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன் அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (18.04.2026) சனிக்கிழமை இரவு அங்கு சென்ற  ஆளுநர், பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் நேரில் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட சந்திப்பில், சங்காரவேல் நிதியத்தின் நிறுவுனர் ச.சுகுமார் நிதியத்தின் செயற்றிட்டங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அதிபர் இ.செந்தில்மாறன், இத்திட்டம் உருவான விதம், பாடசாலையின் வளங்களை ஏனைய மாணவர்களுடனும் பகிர்ந்து பயனுள்ளதாக்கும் உயரிய சிந்தனை மற்றும் இச்செயற்றிட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் அனுசரணையுடன் சாதாரண தர மாணவர்களுக்கான இணையவழிக் கல்விச் செயற்பாடுகள் மற்றும் உயர்தரக் கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகள் எதிர்காலத்தில் எவ்வாறு விரிவுபடுத்தப்படவுள்ளன என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்:
தமது பாடசாலையின் பௌதிக வளங்களை வெளியார் பயன்படுத்துவதைப் பல அதிபர்கள் விரும்புவதில்லை. ஆனால், தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தக் கல்வி மேம்பாட்டுக்காக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் தனது பாடசாலை வளங்களைப் பிற மாணவர்களும் பயன்படுத்தி நன்மையடையும் வகையில் செயற்படுவது மிகவும் போற்றுதலுக்குரியது.
நான் எப்போதும் கூறுவதுபோல, ஒரு பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும். அந்த மாணவனைப் பார்த்து ஏனைய பிள்ளைகளும் முன்னேறத் துடிப்பார்கள். இன்று இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கற்கும் நீங்கள் ஒவ்வொருவரும், நாளை உயரிய நிலையை அடைந்ததும் உங்களைப் போன்ற வறிய மாணவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களைத் தூக்கி விடவும் முன்வர வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறையால் கணித, விஞ்ஞானப் பிரிவுகளைக் கற்க முடியாமல் மாற்றுத் துறைகளை நாடும் மாணவர்களையும், தனியார் வகுப்புகளுக்குச் செல்ல வசதியற்ற மாணவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு இந்த இலவசக் கல்வி வாய்ப்பை வழங்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் சங்காரவேல் நிதியத்தின் பணி உன்னதமானது. இன்று தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றால்தான் பரீட்சையில் சித்தியடைய முடியும் என்றதொரு மாயை சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நாமெல்லாம் படிக்கும் காலத்தில் தனியார் வகுப்புகளுக்குச் சென்றதில்லை. அந்த மாயையை உடைத்தெறிந்து, உங்களைப் போன்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்.
அதேபோன்று, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில் ஈடுபட்டால் கல்வியில் சாதிக்க முடியாது என்ற தவறான கருத்தும் சமூகத்தில் உள்ளது. ஆனால், தேசிய மட்டத்தில் விளையாட்டுக்களில் சாதித்த பல மாணவர்கள் கல்வியிலும் எவ்வாறு முத்திரை பதித்துள்ளார்கள் என்பதை அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார். ஏனைய துறைகளில் சாதிப்பவர்களால் கல்வியிலும் நிச்சயம் சாதிக்க முடியும்.
முடியாது என்று எதுவுமில்லை. முயற்சி செய்தால் எதையும் எங்களால் சாதிக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் இதை மனதிலிருத்துங்கள்.
உங்களுக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை என நீங்கள் ஒருபோதும் தயங்க வேண்டாம். சங்காரவேல் நிதியம் போன்ற நல்மனம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள். இந்த உதவிகளைப் பெற்று உயர்வடையும் நீங்கள், நாளை சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார்.
நிகழ்வின் நிறைவாக, சங்காரவேல் நிதியத்தால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டுப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக்  ஆளுநர் அவர்கள் விருதுகளை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.