;
Athirady Tamil News

அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம் ; அர்ச்சுனா குற்றச்சாட்டு

0

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர் சமூகம், இனிமேல் நிதியுதவி அளிக்கவோ அல்லது அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களிக்கவோ மாட்டாது என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்திருந்த “மெஹேவரக பிரணமய” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் தற்போதைய நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தே புலம்பெயர் சமூகம் தற்போதைய அரசாங்கத்திற்கு நிதியுதவி அளித்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதோடு, அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு எந்தவொரு அர்த்தமுள்ள வளர்ச்சியும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பைத் தாம் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டையும் அனைத்து இன சமூகங்களையும் உண்மையாக நேசிப்பவர்களிடம் மட்டுமே தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.

“நான் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஆதரித்தேன், ஆனால் அவரைத் தேர்ந்தெடுத்ததால் இப்போது என்னையும் சேர்த்து நாடு முழுவதும் துன்பப்படுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளைத் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போராடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்றும், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தனது இத்தகைய வெளிப்படையான கருத்துக்களுக்காக சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்று அஞ்சுவதாகவும், தனக்கு எதிராக ஏற்கனவே பல நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.