திறைசேரி அதிகாரியின் மரணம் ; உண்மையை வெளிக்கொணர புதிய முயற்சி
வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் நிலவும் பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், உடனடியாக உளவியல் பிரேத பரிசோதனை (Psychological Autopsy) ஒன்றை நடத்துமாறு ‘தினன தகுண’ என்ற அரசியல் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் (6) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலம், இந்த மரணம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்புகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளதுடன், மிகவும் உணர்வுபூர்வமான புகைப்படங்களும் பரவி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் தீர்வு காணப்படாமல் இருந்த வஸீம் தாஜுதீன் படுகொலை விசாரணையைப் போலவே, இந்த மரணமும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த ரங்க நிஷாந்தவின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதுடன், 2.5 மில்லியன் டொலர் திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த உளவியல் பிரேத பரிசோதனை மிகவும் அவசியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
விஞ்ஞானத்தையும் சட்டத்தையும் இணக்கமாகப் பயன்படுத்தும் ஒரு விசாரணை முறை நாட்டுக்குத் தேவை என சுட்டிக்காட்டும் அந்த அமைப்பு, உண்மையை வெளிக்கொணர்வதற்குத் தேவையான முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.