;
Athirady Tamil News

யாழில். 04 மாதங்களில் 497 பேர் டெங்கினால் பாதிப்பு

0

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,

கடந்த இரு வருடங்களிலும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் இறப்புகள் காணப்படவில்லை. அதற்கு முந்திய வருடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது

இந்நிலையில் இனிவரும் காலங்களில் நோய் தாக்கம் அதிகரித்து காணப்படாதவகையில் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

தற்போது மழை பெய்து வருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூறி அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு வாரத்தினை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 25 ஆம் திகதி பொதுமக்கள் சிரமதானத்தினை மேற்கொள்ளுதல் , 26 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், 27 ஆம் திகதி தனியார், வர்த்தக நிலையங்களிலும் கள ஆய்வுகள் மற்றும் சிரமதானங்களை மேற்கொள்வது என கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படும் கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்துத்துறை, கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களில் டெங்கு வாரத்தினை பின்னர் யூன் மாதம் 08 ஆம் திகதி இதே செயற்பாட்டை மீண்டும் பின்பற்றுமாறு மாவட்ட செயலரால் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் கே. சிவகரன், பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்முகராஜா, சமுதாய வைத்திய நிபுணர் சிவகணேஷ், பிராந்திய தொற்று நோயியல் வைத்திய நிபுணர் ரஞ்சன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.