சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்ஷி மாகாணத்தில் திங்கள்கிழமை (மே 18) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உலுக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், சுமார் 13 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், அதிர்வுகளால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஏராளமான சாலைகள் முடங்கியுள்ளன.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. லியுசோ நகரத்தில் வசிக்கும் சுமார் 7,000 பேர் உடனடியாக அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமானவர்களில் இறுதி நபரான 91 வயது முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்; இதனால், அதிகாலை முதல் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சீனாவின் தெற்கு மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் மிகுந்த பகுதிகளாக அறியப்படுகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு சிஞ்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 87,000-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.