;
Athirady Tamil News

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை? ; அரசாங்கத்திடம் கோரிக்கை

0

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, தற்காலத்திற்கு அவசியமானதொரு முற்போக்கான நகர்வாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை அங்கீகரித்த முதலாவது நிறுவனம் இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் ருசித பெரேரா தெரிவிக்கையில், “எமது சங்கத்தின் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்கும் நடைமுறையை கடந்த ஆண்டே நாம் உத்தியோகபூர்வமாக்கியுள்ளோம்.

இந்நிலையில், அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறையை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு நாம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.”

அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர முடிந்தால் அது ஒரு பெரிய வெற்றியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மாதவிடாய் காலப்பகுதியில் பெண்களைப் பராமரிப்பது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான வரிகளை நீக்குதல் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையிலும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.