தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு வெளியான முக்கிய தகவல்
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டமானது, கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.
விசேட திட்டம்
தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ளவர்களில் சுமார் 76,716 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் இந்த உதவித்தொகையைப் பெற முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே இந்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய முதியோர் செயலகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத முதியவர்கள், உடனடியாகத் தமது கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களை விரைவில் இந்த உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக, மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், சமூக சக்தி அமைப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுக்களின் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உதவித்தொகை பெறுவதில் நிலவும் இவ்வாறான தடைகளை நீக்கி, தகுதியுள்ள அனைத்து முதியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.