உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி
உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில் 7 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 24 பேர் காயமடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் திமுர் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், போடில்ஸ்கி மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு கட்டடம் பகுதியளவு இடிந்து விழுந்தது. டார்னிட்சியா மாவட்டத்தில் பல அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவை குடியிருப்பு கட்டடங்கள், மக்கள் உறங்கிய மற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்த இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை அதிகாலையிலும் தொடர்ந்த இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மெட்ரோ நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்த நிலையில், நகரம் முழுவதும் குண்டுவெடிப்புச் சப்தங்கள் கேட்டன.
மற்றொரு பெரிய தாக்குதலை ரஷியா விரைவிலேயே நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.