ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்கியதால் இரு நாடுகளும் மீண்டும் போரைத் தொடர்ந்துள்ளன.
இது குறித்து, அமெரிக்க ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுகொண்டிருந்த, சரக்குக் கப்பலான எம்/வி ஜிஎஃப்எஸ் கேலக்ஸியை ஈரான் ராணுவம் தாக்கியுள்ளது. இதனால், இந்த வாரத்தில் ஈரான் மீதான மூன்றாம் கட்ட தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கின. அந்தச் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஊழியர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
ஏற்கெனவே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை பொறுப்பேற்க வைக்கப்பட்ட பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஈரான் மீண்டும் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் மாலுமிகள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை அழிக்க தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.