ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அறிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அறிவித்துள்ளது.
இது குறித்து, “வெளிநாட்டு சக்திகளின் சட்டவிரோத தலையீட்டின் காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மூடுகிறோம்.
இப்பகுதியில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்தும் வரை அது மூடப்பட்டே இருக்கும். எந்தவொரு கப்பலும் இந்த நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படாது” என்று ஈரான் தரப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.