;
Athirady Tamil News

யாழ் . மாநகர சபையின் கழிவு மீள் சுழற்சி மையத்தால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் இன்னல்களுடன் வாழும் மக்கள்

0
யாழ்ப்பாணம் , காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர சபையின் கழிவு மீள் சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில்  அமைந்துள்ளது. தற்போது அங்கு மீள் சுழற்சிகள் இடம்பெறாமல்  குப்பைகள் கழிவுகளை கொட்டுவதனால் , அயலில் வசிக்கும் தாம் பல்வேறு இடர்களை சந்திப்பதாக குறித்த மீள் சுழற்சி மையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

மாநகர சபையினால் , காக்கைதீவு பகுதியில் மீள் கழிவு மீள் சுழற்சி மையம் அமைக்கப்பட்டது. எமது குடிமனை பகுதியில் அவை அமைக்கப்படும் போது , இது குப்பை கொட்டும் இடமில்லை. கழிவுகளை தரம் பிரித்து , அவற்றை மீள் சுழற்சி செய்யும் இடம் என கூறினார்கள்.

ஆரம்பத்தில் அவ்வாறே இயங்கியது. அங்கு கழிவுகளில் இருந்து உரங்கள் செய்யப்பட்டன. கழிவு மீள் சுழற்சியே நடைபெற்றது.

சிறிது காலத்தில் அவை கைவிடப்பட்டு , குப்பை கொட்டும் இடமாக மாறியது. அங்கு கழிவுகளை தரம் பிரிக்காது கொட்டி குப்பை மேடுகளாக அப்பகுதிகளை மாற்றியுள்ளனர்.

மலசல கூட கழிவுகள் , தனியார் உணவகங்கள் , தங்குமிட கழிவு நீர் என்பவற்றை அங்கு முன்னர் வடிகட்டும் செயற்பாடுகள் நடைபெற்றது. தற்போது அவை உரிய முறையில் வடிகட்டாது நீரினை அங்குள்ள வாய்க்காலுக்குள் விடுவதனால், அருகில் உள்ள நாம் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறோம்.

எமது குடிமனைக்குள் உள்ள குடிநீர் கிணற்று நீர்கள் மாசடைந்து , துர்நாற்றம் வீசுகிறது . கொட்டப்படும் கழிவுகளால்  இலையான்கள் பெருகி , வீடுகளில் இலையான் தொல்லைகள் காணப்படுகிறது.

இலையான் தொல்லைகளில் உணவுகளை சற்று நேரம் கூட திறந்து வைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. உணவை பொறுமையாக உண்ண முடியாத அளவுக்கு எமது உணவு தட்டுக்களில் இலையான் தொல்லைகள் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு பரவல் அதிகமாக காணப்படுகிறது. டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. எங்கள் வீடுகளில் சிறு சிரட்டையில் தண்ணீர் நின்றாலே , டெங்கு பரவும் சூழலை பேணுகிறார்கள் என நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆனால் குறித்த கழிவு மீள் சுழற்சி மையத்தில் கழிவு நீர்கள் அங்குள்ள வாய்க்கால்களில் தேங்கி நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கழிவுகளை தரம் பிரிக்காது கொட்டி குப்பை மேடாக்கி உள்ளனர் என நாம் குற்றம் சாட்டி , நடவடிக்கை எடுக்க கோரி வந்த நிலையில் கடந்த வாரம் அப்பகுதி தீ பற்றி எரிந்தது, இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக ஒரு இரவு நாம் எமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கி இருந்தோம்.

அந்த தீ கூட திட்டமிட்டு எரிக்கப்பட்டதாகவே நாம் சந்தேகிக்கின்றோம். அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிந்தோம். எனவே அது தொடர்பில் நாம் மேலும் கருத்து கூற விரும்பவில்லை.

குறித்த கழிவு மீள் சுழற்சி மையத்திற்கு அருகில் உள்ள குடிமனைகளில் வாழும் குடும்பங்களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன.அது  மட்டுமின்றி சுவாச நோய்கள் , ஆஸ்துமா உள்ளிட்ட தொற்றா நோய்களுடன் நோயாளிகள் உள்ளனர். இந்த நோய் தொற்றுக்களுக்கு கூட இந்த கழிவு மீள் சுழற்சி மையம் காரணம் என கருதுகிறோம்.

எனவே இந்த கழிவு மீள் சுழற்சி மையத்தில் எமது குடிமனை பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.