;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம்

0
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிரினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு-தாமதமின்றி திட்டங்களை முன்னெடுக்க அமைச்சுக்களுக்குப் பரிந்துரைக்க முடிவு

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கான அங்கீகாரமும் தீர்மானங்களும், இன்று (15) நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளன.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப்  ஒருங்கிணைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர்  பிரதேசத்தின் நீண்டகாலத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான திட்ட வரைபைச் சமர்ப்பித்தார்.

“நிந்தவூர் மக்களின் நீண்டகால அபிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இத்திட்டங்கள் எவ்வித நிர்வாகத் தாமதமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து அரச திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என அவர் தனது உரையின் போது வலியுறுத்தினார்.

நிந்தவூர் 05 ஆம் பிரிவில் 3ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கடற்கரை 2ஆம் வீதி வரையிலான குடியிருப்புகளில் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் நோக்கில், கிட்டங்கி வீதியூடாகப் புதிய வடிகால் அமைக்கப்பட்டு, அது நயீம் பள்ளிவாசல் வடிகாலுடன் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன், நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி முறையான வடிகால்களை அமைத்து, மண் நிரப்பி மைதானத்தை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், வெட்டுவாய்க்கால் வீதியில் காரைதீவு – நிந்தவூர் உள் பாலத்திற்கு கிழக்கே காணப்படும் வீதி தாழ்வை நிரந்தரமாகச் சீரமைத்து, நிறுத்திவைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வித் திட்டத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, நிந்தவூர் 09 ஆம் பிரிவில் புதிய முன்பள்ளி பாலர் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கும், மினா, ஜேர்மன் மற்றும் அல்-சஹிதா பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி புதிய பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் விரிவாக ஆராயப்பட்டு, அவற்றை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குப் பரிந்துரைகளை அனுப்பி, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பணிகளை விரைவுபடுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.