;
Athirady Tamil News

 ‘ஐஸ்’ விநியோகித்த தம்பதியினர் அம்பாறையில்  கைது

0

அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து ‘ஐஸ்’ மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர், அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முவங்கல பகுதியிலுள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற போதே இவர்கள் கையும் மெய்யுமாகச் சுற்றிவளைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் முவங்கல கிராமம் 8 ஐச் சேர்ந்த 37 மற்றும் 34 வயதுடைய தம்பதியினர் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயின், பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 21,510 ரூபாய் பணமும், போதைப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், இது குறித்து கிராம மக்களால் தமன பொலிஸ் நிலையத்திற்குப் பலமுறை முறைப்பாடுகள்  வழங்கப்பட்டிருந்தன.தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான அதிகாரிகள் பலமுறை இவர்களது வீட்டைச் சோதனை செய்த போதிலும், போதிய சான்றுகள் இன்மையாலும் தந்திரமாகத் தப்பியதாலும் இவர்களைக் கைது செய்ய முடியாமல் இருந்தது.

இதனையடுத்து, இப்பிரச்சினை குறித்து அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அவர்களைக் கைது செய்வதற்கான விசேட உத்திபூர்வத் திட்டம் தீட்டப்பட்டு இன்று   வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமன காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்னவின் வழிகாட்டுதலின் கீழ், சந்தேக நபர்கள் நாளை (16) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் அறிவுறுத்தலின் கீழ்  அம்பாறைப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையில்  அம்பாறை -01  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன மற்றும் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில்  ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரி முதித பிரியங்கர உள்ளிட்ட குழுவினர் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எதிர்காலத் தலைமுறையினரான பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அரக்கனிடமிருந்து பாதுகாக்க இத்தகைய கடுமையான சுற்றிவளைப்புகள் தொடரும் என  அம்பாறை பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.