;
Athirady Tamil News

நல்லூரில் ‘தெய்வீக சுகானுபவம் – 12’ இசை நிகழ்வு

0
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக சுகானுபவம் – 12’ இசை நிகழ்வு, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, இசை மற்றும் கலை நிகழ்வுகளின் ஊடாக ஆன்மீக உணர்வையும் இசை நயத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இடம்பெற்றதுடன், பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தால் தமிழ்த்தாய் வாழ்த்து, நல்லூர் நர்த்தன ஷேத்ரா மாணவிகளின் வரவேற்பு நடனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறை மாணவிகளின் நடன நிகழ்வுகள், புல்லாங்குழல் இசை மற்றும் கலைஞர்களின் இசை வழங்குகைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வுக்கு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமை தாங்கியதுடன், கடற்றொழில், அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரபல புல்லாங்குழல் கலைஞர் அதுல் குமார் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்வும், புகழ்பெற்ற பாடகியும் கலைமாமணி விருது பெற்றவருமான சாரதா ராகவ் அவர்களின் குரலிசை நிகழ்வும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.