;
Athirady Tamil News

தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி

0

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.

இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது.

குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,184 வாக்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்ற நிலையில் சி.சிறீதரன்,இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

மரபு ரீதியான நடைமுறை
இந்த சூழ்நிலையில் பொதுச்செயலாளர் பதவியானது,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுகின்ற யாப்புக்கு அப்பாற்பட்ட ஒரு மரபு ரீதியான நடைமுறை தமிழரசு கட்சியில் இருந்து வருகின்றது.

கடந்த காலத்தில்,ராசமாணிக்கம் தலைவராக இருந்த போது,வடக்கில் செயலாளர் இருந்தார், வடக்கில் மாவை சேனாதிராஜா இருந்த போது கிழக்கில் செயலாளர் இருந்த மரபுகள் எல்லாம் இருந்தன.

இதனடிப்படையில்,மட்டக்களப்பிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற இரு தலைமைத்துவ வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவியை வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் கடந்த வாரம் தலைவர் தெரிவிற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு கிளை கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் முக்கியஸ்தருமான பா.அரியநேந்திரன் தமது சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

இதனை ராசமாணிக்கம் சாணக்கியன் அது அவருடைய தனிப்பட்ட கருத்து அதை இப்போது பரிசீலிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தலைவர் தெரிவின் பின்னர் மீண்டும் அரியநேந்திரன் இந்த கருத்தை முன்மொழிந்திருந்தார்.

அதாவது வடக்கு கிழக்கு ஆதரவாளர்கள் சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாகவும் அதனை அனைவரும் ஏற்பார்கள்,காரணம் இது வடக்கு கிழக்கு என்ற பிரதேச வாதத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என கூறியிருந்தார்.

இதனை இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் முக்கிய பிரமுகர் வேலமாளிதரன் இந்த முடிவை சரியானது எனவும் அதனை தாங்கள் ஒத்து செல்வதாக கூறியிருந்தார்.

பொதுச்செயலாளர் தெரிவு
இந்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ளது.

இந்த சூழலில் செயலாளர் பதவியை ஒரு போட்டி விவகார சூழலுக்குட்படுத்த ஒரு தரப்பு முனைவதாக இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தலைவர் தெரிவில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒருவர் இந்த விடயங்களில் தனக்கு சார்பான ஒருவரை பொதுச்செயலாளராக நிறுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவை தொடர்பில் அவருடைய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை தேவையற்ற மனக்கசப்புக்கள் இன்றி பொதுச்செயலாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிழக்கில் உள்ளது.

கிழக்கில் பிரதேசவாசம் பேசுபவர்களுக்கு இந்த செயலாளர் பதவிக்கான போட்டி தீனி போடுவதாக அமைந்துவிடும் என்றும் அது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

பொதுவாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் இப்போது திரைமறைவில் மீண்டும் ஒரு பகிரத்தன பிரயத்தனம் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

இந்த பகிரந்த பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தரப்பினர் இப்போது மீண்டும் ஒருமுறை தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை அறிய முயற்சி செய்துள்ளனர்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழரசு கட்சியின் 80 சதவீதமான ஆதரவாளர்கள் செயலாளர் பதவியை மட்டக்களப்பிற்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில் ஒரு தரப்பினர் ஏற்படுத்தும் குழப்பநிலை கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள்,விமர்சகர்கள்,அரசறிவியல் சார்ந்து பேசக்கூடிய பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாகவும் பொதுச்செயலாளர் பதவிக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 6 பேர் போட்டியிடத் தயாராகி வருகின்றனர் என்றும் அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.

இதன் மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயமும் மாற்றமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் தேர்தல் மூலம் தெரிவானால் 75 ஆண்டுகள் வரலாற்று பாரம்பரியம் கொண்ட அந்த கட்சியின் மரபு மாற்றமடையலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.