;
Athirady Tamil News

டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கியது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்..!!

0

டோராண்டா கருவூல வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. ஏற்கனவே அவர் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், சிறை தண்டனை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் ஜாமின் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் பிரபாத் குமார் கூறியதாவது:-

ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எங்களின் மனுவை ஏற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டார் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தோம். லாலு ஏற்கனவே 41 மாதங்கள் சிறையில் இருந்தார். விசாரணை நீதிமன்றத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செவ்வாய்க்கிழமைக்குள் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜாமின் பத்திரத்தை சமர்ப்பித்து விடுதலை உத்தரவை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.