;
Athirady Tamil News

கலிபோர்னியாவில் தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி மாணவர் பலி

0

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயி (வயது 26) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது.

பி.எச்.டி மாணவர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்ரம் முபாயி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்தார். மலையேற்றம் மற்றும் சாகச பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

திடீர் மாயம்

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி, கலிபோர்னியாவின் சியரா நெவாடா பகுதியில் உள்ள பிக் பைன் லேக்ஸ் மலைப்பாதையில் விக்ரம் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டார். அன்று இரவு 8:30 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு ஜி.பி.எஸ் மூலம் தனது இருப்பிடத்தை கடைசியாக அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை; செல்போனும் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் பதறிய குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஏரியில் மிதந்த உடல்

இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தேசிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இரண்டு நாட்கள் தீவிரமாக தேடிய நிலையில், அங்குள்ள ஒரு ஏரியில் விக்ரம் முபாயி பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் அவரது உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணை

அவர் மலையிலிருந்து தவறி விழுந்து ஏரியில் மூழ்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் எந்தவித சதித்திட்டமும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக சேவை மற்றும் சாகசங்களில் ஈடுபாடு கொண்ட இந்திய வம்சாவளி மாணவர் விக்ரம் முபாயியின் திடீர் மரணம், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.