;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கீவ் பகுதியில் மேலும் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்- ஜெலன்ஸ்கி தகவல்..!!

0

30.4.2022

03.20: உக்ரைனில் ரஷிய படை தாக்குதலின் போது அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும் என அமெரிக்கா நம்பவில்லை என்று, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

02.50: கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சுமார் 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று போலந்து ஊடகத்திடம் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

01.40: ஐ.நா.பொதுச் செயலாளர் உக்ரைன் வந்திருந்தபோது கீவ் நகரின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ரஷியா உறுதிபடுத்தி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் மூலம் உக்ரைன் விண்வெளி நிறுவனங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12.30: மரியுபோல் நகரில் போரினால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஐ.நா.சபை ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்குள்ள எஃகு உற்பத்தி ஆலையின் உள்ளே நிலைமை மோசமாக உள்ளது என்றும், அங்கே பதுங்கியுள்ளவர்கள் காப்பாற்றுமாறு கெஞ்சுவதாகவும் மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரஷிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனின் படைகள் தீவிரமாக போராடி வருகிறது. சில நகரங்களில் பீரங்கித் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

29.4.2022

20.45: உக்ரைன் ரஷியா இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் புகைப்படத்தை டைம் இதழ் தனது அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது. அதில் போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை எப்படி வழிநடத்துகிறார் என்ற வரிகளுடன் டைம் வார இதழ் வெளியிட்டுள்ளது.

14.50: உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

03.40: உக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் வருகை தந்துள்ள நிலையில், கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா.அமைப்பு உள்பட அனைத்து பிரதிநிதித்துவத்தையும் அவமானப்படுத்தும் ரஷிய தலைமையின் முயற்சி என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகள் மீது ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இரண்டு கட்டிடங்கள் சேதடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அந்நாட்டு அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

01.40: ரஷ்யா, தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து தானியங்களைத் திருடியதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து பயிர்களை ரஷிய படைகள் அபகரித்துள்ளதாகவும், தானியங்களை திருடியதாகவும்தெரிவிக்கப் பட்டுள்ளது. உக்ரைன் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷியா எந்த பதிலும் அளிக்கவில்லை.

12.30: ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள அவர், தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். இருநாடுகள் இடையே போரை தடுக்கவும், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அனைத்து முயற்சிகளையும் செய்ய தவறி விட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.