;
Athirady Tamil News

பா.ஜனதாவை வீழ்த்த தேசிய அளவில் புதுகட்சி- சந்திரசேகர ராவ் முடிவு ..!!

0

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளது. ஒரு புறம் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அதே போல தெலுங்கானா முதல்-மந்திரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் சந்திரசேகர ராவ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க புதிய கட்சியை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ அல்லது ‘நவபாரத் கட்சி’ என பெயர் வைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் பா.ஜனதா மதவாத கொள்கையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அக்கட்சியை வெல்ல அகில இந்திய அளவில் புதிய கட்சியை உருவாக்க எதிர் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் வலுவாக இருக்கும் என சந்திரசேகர ராவ் கருதுகிறார். அதன்போரில் இந்த புதிய கட்சி உருவாக உள்ளது. வருகிற 19-ந்தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் 19-ந்தேதிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சந்திரசேகர ராவ் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.