;
Athirady Tamil News

யாழ்.போதனா பணிப்பாளருக்கு எதிராக உரிய விசாரணை இல்லையெனில் தொழில்சங்க போராட்டத்திற்கு முஸ்திப்பு!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில், பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு எதிரான விசாரணைகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சு தாய் சங்கத்திற்கு வாய் மொழி மூலம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கூட்டத்தில் “பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் மூன்று நாட்களின் பின்னர் கூடும் பொதுக்குழு கூட்டத்தில் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்” என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து யாழ்.போதான வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு அளித்துள்னர்.

இதேவேளை உயர்கல்விக்காக பிரித்தானியாவிற்கு சென்றிருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் த. சத்தியமூர்த்தி, சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ். போதனாவின் பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் சத்தியமூர்த்தி!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.