;
Athirady Tamil News

கேரளாவில் வருகிற 21-ந் தேதி குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு..!!

0

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதை அடுத்து வரும் 21-ந் தேதி சுபமுகூர்த்த தினமாகும். அன்று ஞாயிற்று கிழமை என்பதால் பலரும் 21-ந் தேதி திருமணம் செய்ய நாள் குறித்தனர். இதற்கான முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுமார் 200 ஜோடிகள் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்தனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 2 நாட்களுக்கு முன்பு முன்பதிவை நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அன்றைய தினம் முன்பதிவு செய்ய வந்தவர்களின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து முன்பதிவு மறுக்கப்பட்டவர்களில் சிலர் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு, குருவாயூர் கோவிலில் 21-ந் தேதி திருமணம் செய்ய விரும்புவோரின் மனுக்களை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. அதனை கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து குருவாயூர் கோவில் நிர்வாகம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ஏற்கனவே உள்ள 3 திருமண மண்டபங்களுடன், கோவில் நடை பந்தலில் கூடுதலாக 2 திருமண மண்டபங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள விரும்புவோரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, என்றும் அறிக்கையில் கூறியிருந்தது. இதுபோல குருவாயூர் நகராட்சியும், திருமண பதிவுக்காக விடுமுறை நாட்களிலும், நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளது. அவர்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.