;
Athirady Tamil News

விசேட தேவையுள்ள பெண்களுக்கும் நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு நிகழ்வு!! (படங்கள்)

0

விசேட தேவையுள்ள பெண்களுக்கும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு நிகழ்வு இன்று(22) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக் கழக பால்நிலை ஒப்புரவு, சமத்துவத்துக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். சிவாணி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விசேட தேவையுள்ள பெண்களுக்காக சுமார் 2.3 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. இனங்காணப்பட்ட தேவைகளையுடைய பெண்களின் தேவைகளுக்கேற்ப, நன்கொடையாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களுக்கான உதவிகள் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையென – அவர்களால் வேண்டப்பட்ட பொருள்கள் மற்றும் நிதியுதவிகளும், வாழ்வகத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள இரண்டு மாணவிகளுக்கு அவர்களின் கல்விக்குத் தேவையான உதவிப் பொருள்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ். பல்கலைக் கழக பால்நிலை ஒப்புரவு, சமத்துவத்துக்கான நிலைய உறுப்பினர்கள், வாழ்வகத் தலைவர் எஸ். ரவீந்திரன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்வில் உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த பங்குனி 8 ஆம் திகதி அனைத்துலக மகளிர் தினத்தன்று யாழ். பல்கலைக் கழக பால்நிலை ஒப்புரவு, சமத்துவத்துக்கான நிலையத்தினால் கிளிநொச்சி அம்பாள் நகரில் நடாத்தப்பட்ட அனைத்துலக மகளிர் தின நிழ்வில் மகளிர் தொழில் முயற்சியாளர்கள் இனங்காணப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்சியாகவே இன்றும் தேவையுள்ள மகளிருக்கான உதவி வழங்கல் மற்றும் நன்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.