மாணவர்களைக் குறிவைக்கிறது பாதுகாப்பு அமைச்சு!!
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்து விட்டு, உரிய காலத்தினுள் பட்டம் பெற்று வெளியேறாமல், திரும்பத் திரும்ப தங்கள் கல்வி நடவடிக்கைகளைப் பிற்போடும் மாணவர்கள் மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு கவனஞ் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு பதிவு செய்து நீண்டகாலமாகப் பட்டம் பெறாமல் பல்கலைக கழகங்களில் இருக்கும் மாணவர்களின் விவரங்களைப் பாதுகாப்பு அமைச்சு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரியிருக்கிறது.
இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
எமது பல்கலைக் கழகங்களினது பல்வேறு பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் அரசுக்கெதிராக இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டுள்ளது.
மாணவர் மன்றங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் தடையாக இருக்காது எனினும் கடந்த காலங்களில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஒரு சில அரசியல் கட்சிகள் தமது தவறான அரசியல் நோக்கங்களைச் செயற்படுத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்துகின்றன என்பதை உணர முடிகிறது.
இதனால் பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்து விட்டு, உரிய காலத்தினுள் பட்டம் பெற்று வெளியேறாமல், திரும்பத் திரும்ப தங்கள் கல்வி நடவடிக்கைகளைப் பிற்போடும் மாணவர்கள் மற்றும் மீள் பரீட்சார்த்திகளின் விவரங்களை பல்கலைக் கழகங்களிடம் கோரிப் பெற்றுத் தருமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளார்.