;
Athirady Tamil News

வடக்கு ரயில் பாதையின் ஒருபகுதியை புனரமைக்க நடவடிக்கை!!

0

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணியை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர தெரிவித்தார்.

மஹவ சந்திக்கும் வவுனியாவிற்கும் இடையிலான வடக்கு ரயில் பாதையின் குறித்த பகுதி சுமார் நூறு வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை.

இதனால், ரயில்கள் அடிக்கடி தண்டவாளத்தை விட்டு தடம் புரள்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அநுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார். .

மஹவ மற்றும் வவுனியாவிற்கு இடையிலான ரயில் பாதையை இரண்டு கட்டங்களாக புனரமைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இதன்படி, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலும் இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளன.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் முதற்கட்டப் பணிகள் அடுத்த வருடம் (2023) ஜனவரி 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால், ஜனவரி 5ஆம் திகதி முதல் வடக்கு ரயில் சேவையை அநுராதபுரம் வரை மட்டுப்படுத்த ரயில்வே அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த ரயில் பாதையை புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.