;
Athirady Tamil News

நத்தம் அருகே சொத்துக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை?

0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகில் உள்ள ரெங்கயசேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள்(65). கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் பெரியம்மாள் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது ஒரே மகன் திருமணமாகி குடும்பத்துடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். பெரியம்மாள் ரெங்கயசேர்வைகாரன்பட்டி மயானம் அருகே உள்ள வீட்டில் வசித்து வேலைக்கு சென்றுவந்துள்ளார்.

நேற்றிரவு அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் உறவினரான கோபிராஜா நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பெரியம்மாளுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்துபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டு பெரியம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு முன்விரோதம் காரணமாக மோதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.