;
Athirady Tamil News

மதப் பேரணியில் மோதிய 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம்! 9 புத்த துறவிகள் பலி!

0

தாய்லாந்து நாட்டில், 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மதப் பேரணியின் மீது மோதியதில் 9 புத்த துறவிகள் பலியாகியுள்ளனர்.

தாய்லாந்தின் முக்தாஹன் மாகாணத்தில் இருந்து 35 புத்த துறவிகள் உபோன் ரட்சாதணி மாகாணத்தை நோக்கி பேரணியாக இன்று (ஜூலை 2) சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, 11 வயது சிறுவன் ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புத்த துறவிகளின் பேரணிக்குள் புகுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், 5 புத்த துறவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 துறவிகள் சிகிச்சை பலனின்றி பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பெற்றோரின் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சிறுவன் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், படுகாயமடைந்த மேலும் 13 துறவிகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒரே வரிசையில் நடந்து சென்ற துறவிகள் மீது திடீரென சிறுவன் ஓட்டி வந்த வாகனம் மோதும் விடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.