;
Athirady Tamil News

2024இல் சாதமாக நகரத் தொடங்கும் !!

0

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சாதகமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி படிப்படியாக நகரத் தொடங்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த முதன்மை பொருளாதார வெளியீடான ஆசிய அபிவிருத்தி கண்ணோட்டம் 2023இல் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் கொடுப்பனவுகளின் சமநிலை சிக்கல்களுடன் தொடர்ந்து போராடுவதால் 2022 இல் 7.8% ஆக சுருங்கிய பொருளாதாரம் 2023 இல் 3% ஆக சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் தேவையான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அனுமானித்து அபிவிருத்தி வங்கி கணிப்பை தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017 இல் ஏற்பட்ட அனர்த்தங்கள், 2018 இல் அரசியலமைப்பு நெருக்கடி, 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், 2020-2021 இல் கொவிட் தொற்றுநோய், 2022 இல் ரஷ்ய-உக்ரைன் நெருக்கடி மற்றும் 2019 இல் வரி குறைப்புகளை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வது கடன் நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களின் உறுதியான அமலாக்கம் ஆகியவற்றில் சரியான நேரத்தில் முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையான சீர்திருத்தங்களில் உள்நாட்டு வளங்களை திரட்டுதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் செயல்திறனை மேம்படுத்துதல், பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகளை ஒத்திசைப்பதன் மூலம் தனியார் துறை செயல்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு ஊழலுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்துதல், பலமான நிறுவனங்களை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை மேம்படுத்துவதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.