;
Athirady Tamil News

மிருசுவிலில் குடும்பஸ்தர் ஒருவர் அலவாங்கால் குத்திக்கொலை!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்து வந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்தவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக இளைஞனின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அப்போது, வீட்டுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.

வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.

நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.

இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார். சடலத்திற்கு அருகில் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.