;
Athirady Tamil News

அமெரிக்கா மீது சீனா சைபர் தாக்குதல் – எச்சரித்த நிபுணர் குழு..!

0

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மீது சீனா சைபர் தாக்குதலை தொடுப்பதாக மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் எச்சரித்துள்ளன.

எதிரி தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஊடுருவி, அவற்றை குலைப்பது மற்றும் நாசம் செய்வதன் மூலமும் எதிரி தேசத்தை கலங்கடிக்கச் செய்கின்றன.

அப்படியான தாக்குதல் ஒன்றினை தங்கள் மீது சீனா நிகழ்த்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

இதனை மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் தற்போது உறுதி செய்துள்ளது.

அமெரிக்கா – சீனா நாடுகளின் மோதல் ஹேக்கர்களைக் கொண்டு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவை குறித்தான முறைப்பாடுகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களின் தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சைபர் பாதுகாப்பு அம்சங்களில், சீன ஹேக்கர்கள் அத்துமீறி ஊடுருவி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்தான முறைப்பாடுகள் வெளியானதும், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அவற்றை முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

“சீனா மீது பெரும் சைபர் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனை மறைக்கவே இது போன்ற முறைப்பாடுகளை அவிழ்த்து விடுகிறது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த பிரச்சாரங்களுக்கு இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உடந்தை” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – சீனா இடையே ஹேக்கிங் முறைப்பாடுகள் பல வருடங்களாக மோதல் தொடர்ந்து வந்தபோதிலும், பகிரங்க சைபர் தாக்குதல் அளவுக்கு மிகப்பெரும் இணையவெளித் தாக்குதலை சீனா திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் போல, தைவான் மீதான ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை சீனா தொடங்கும்போது, அமெரிக்காவில் சீன ஹேக்கர்களின் ’சைபர் தாக்குதல் ’ வெடிக்கும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை அனுமானிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவை நிலைகுலையைச் செய்யவும், தைவான் விவகாரத்தில் அது மூக்கு நுழைக்காதபடி தடுக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் இராணுவம் சார்ந்த வலையமைப்புகள் கடும் தாக்குதலுக்கு ஆளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சைபர் தாக்குதல் முன்னேற்பாடுகள் குறித்து மேற்கு நாடுகள் நீண்ட காலமாக எச்சரித்து வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் சீனாவின் சைபர் அத்துமீறலை உறுதி செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.