;
Athirady Tamil News

காவலர்களின் சிறிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும்- ராமதாஸ்!!

0

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவல்துறை பணியின் போது நிகழும் சிறிய தவறுகளுக்காக காவலர்களுக்கு துறை சார்ந்த சிறிய தண்டனைகள் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு வரை இந்தத் தண்டனை பெற்றவர்கள் கூட, துறை சார்ந்த ஒதுக்கீட்டின் கீழ் சார் ஆய்வாளர் பணிக்கு போட்டியிட முடியும். ஆனால், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு 3ஏ, 3 பி பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் சார் ஆய்வாளர் பணிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று காவலர்கள் அளித்த மனு மீது காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் கடந்த இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் தீர்ப்பளிக்கப்படாதது தான் காவலர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு காரணம் ஆகும். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 386-ம் வாக்குறுதியாக “காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் காவலர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

காவல் சார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30-ம் நாள் கடைசி நாளாகும். பல்லாயிரக்கணக்கான காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவு மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சார்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவலர்களின் சார் ஆய்வாளர் பதவி உயர்வு கனவை நனவாக்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.