;
Athirady Tamil News

பாளையில் பள்ளி விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து ஓடிய மாணவிகள்- சேலத்தில் நள்ளிரவில் மீட்ட போலீசார்!!

0

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்வி பயில வருகின்றனர். இதனால் மாணவிகளின் வசதிக்காக பள்ளியுடன் சேர்ந்த விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 65 மாணவிகள் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வு அளிக்கப்பட்டு இரவு 9 மணி முதல் 9.30 மணிக்குள் தூங்க செல்வார்கள். அப்போது அனைத்து மாணவிகளும் இருக்கிறார்களா என விடுதி காப்பாளர் உறுதிபடுத்துவார்.

நேற்று விடுதி காப்பாளர் மாணவிகளை எண்ணும்போது 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாயமானது தெரிய வந்தது. இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவிகள் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பாளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 மாணவிகள் பள்ளி விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து ஓடிய வீடியோ பதிவுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதை வைத்து போலீசார் மாணவிகளை ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இரவில் தீவிரமாக தேடினர். மேலும் அனைத்து ரெயில்வே காவல் நிலையத்திற்கும் மாணவிகள் தொடர்பாக பாளை போலீசார் தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் 2 மாணவிகளும் சேலத்தில் மீட்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டதாக பாளை போலீசாருக்கு இன்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் பள்ளிக்கும், மாணவிகளின் பெற்றோருக்கும் போலீசார் தகவலை தெரிவித்ததையடுத்து அவர்கள் நிம்மதியடைந்தனர். இன்று அந்த மாணவிகள் சேலத்தில் இருந்து பாளை போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட உள்ளனர். அங்கு மாணவிகளிடமும், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகே அவர்கள் ஏன் விடுதியில் இருந்து ஓடினர்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.