ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீயை அணைக்க 74 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தின் நான்காவது தளத்தில் உள்ள இசை வகுப்பு அறையில் தீ விபத்து முதலில் ஏற்பட்டதாக கிட்டா வார்டு கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, குழந்தைகள் அருகிலுள்ள பூங்காவிற்கு வெளியேற்றப்பட்டனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வீட்டிற்குச் சென்றனர். தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இச்சம்பவத்தின்போது பள்ளி வளாகத்திற்குள் சுமார் 360 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர்.
பெருநகரக் காவல் துறை மற்றும் பிற அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.