;
Athirady Tamil News

யாழ்.நகரில் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்குதல் – நால்வர் கைது!!

0

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நேற்று பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இழுத்து ஏற்றி கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். படுகாயப்படுத்திவிட்டு அவரை கைவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவின் கீழ் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையில் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தி மற்றும் காணொளிப் பதிவு செய்த அதிதிறன் அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த பழக்கடை வியாபாரியிடம் பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார். அதனால்தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.