;
Athirady Tamil News

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பது இந்தியாவின் உறுதிப்பாடாகும் – இந்திய உயர்ஸ்தானிகர்!!

0

இலங்கையை பொருளாதார, பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தினதும், வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். இது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் ஹோட்டலில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்க முடியும். அது இலங்கை மக்கள் மத்தியில் செழிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.

இலங்கை மக்கள் ஒடுக்கப்பட்ட போதெல்லாம் அந்த மக்களுடன் இந்தியா துணையிருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் வர்த்தக சமூகத்திற்கு உதவிகளை வழங்கியது.

இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்றே கூற வேண்டும். நிதி நெருக்கடியின் போதும், இலங்கையின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே ஆதரவளித்துள்ளார்.

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என்பது இங்கு நினைவுகூரப்படுகிறது.இது இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்றே கூற வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.