;
Athirady Tamil News

மேல்சபை எம்.பி. பதவிக்கு சோனியா காந்தி போட்டி?- கர்நாடகாவில் இருந்து தேர்வு பெறுகிறார்!!

0

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார். 2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 1999-ல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தநிலையில் 5 முறை எம்.பி.யான சோனியாகாந்தி மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் 4 எம்.பி.க்களுக்கான மேல் சபை தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ளது.

ஜி.சி.சந்திரசேகர், சையத் நசீர் ஹூசைன், டாக்டர் எல்.ஹனுமந்தையா (அனைவரும் காங்கிரஸ்) மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகிய 4 எம்.பி.க்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது. தற்போதைய நிலவரப் படி காங்கிரஸ் நான்கில் மூன்றில் வெற்றி பெறும். சோனியாகாந்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து மேல்சபைக்கு செல்ல வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். சோனியா காந்தி சமீபத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றார். அப்போது அவர் இந்த கோரிக்கையை வைத்தார். இதற்கு சோனியா காந்தி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே சித்தராமையா கோரிக்கையை ஏற்று சோனியா காந்தி மேல் சபைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மேல்சபை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1989-ல் ராஜீவ்காந்தி எதிர்கட்சி தலைவராக குடிபெயர்ந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும். 2024 பாராளுமன்ற தேர்தலில் சோனியா போட்டியிட விரும்ப வில்லை. ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம். சோனியாவுடன் சையத் நசீர் ஹூசைன் மற்றும் சுப்ரியா ஹிரினேட் ஆகியோரும் மேல்சபை எம்.பி.யாக கர்நாடகாவில் இருந்து தேர்வு பெறுவார்கள் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.