;
Athirady Tamil News

இடுக்கி அருகே நிலச்சரிவு- கார் மீது பாறை விழுந்து பெண் பலி!!

0

கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பிபின் திவாகரன். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாஞ்சாலி மேடு பகுதிக்கு விடுமுறை தினமான நேற்று சுற்றுலா சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அவர்களுடன், அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் இடுக்கி உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் சோமினி (வயது66) என்ற மூதாட்டியும் சென்றிருந்தார். அவர்கள் பல இடங்களுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இடுக்கி மலைப்பாதையில் குட்டிக்கானம் பகுதியில் வலஞ்சங்கனம் அருவி அருகே குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக காரை சாலையோரத்தில் நிறுத்தியிருந்தனர். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவர்கள் அனைவரும் காருக்குள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது கார் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்த மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் மேலே இருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து பிபினின் காரின் மீது விழுந்தது. இதில் கார் தரையோடு தரையாகும் அளவுக்கு சேதமடைந்தது. பிபின் திவாகரன் உள்ளிட்ட அனைவரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காருக்குள் இருந்த பிபின், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மூதாட்டி சோமினி காரில் அமர்ந்திருந்த இடத்தில் பாறை விழுந்ததால், அவர் இடிபாடுகளில் சிக்கினார். அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சோமினி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பீருமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பிபின், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மீது பாறாங்கல் விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் இடுக்கி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.