;
Athirady Tamil News

காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு நீரை கொடுக்காதீங்க.. கர்நாடக முன்னாள் முதல்வர் பரபரப்பு கடிதம்..!

0

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. எனினும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இருந்த போதிலும், கர்நாடகா தரப்பில் தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி, அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், “கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம். கர்நாடக அணைகளில் உள்ள நீர், பெங்களூரு மற்றும் காவிரி விவசாயிகளுக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.