;
Athirady Tamil News

மட்டக்களப்பிற்கு வர இருக்கும் இருதய சிகிச்சை இயந்திரம்!!

0

புதிதாக சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கான (அஞ்சியோகிராம்) இயந்திரத்தினை மட்டக்களப்பிற்கு முன்னுரிமை கொடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் தொலைபேசி மூலம் உத்தரவாதம் தந்துள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கரணாகரம் ஜனா தெரிவித்தார்.

இவ்விடயத்தை அரசியல் ரீதியாகப் பாராது மாவட்டத்தின் ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வியத்திரத்தை இங்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு நாங்கள் நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த கத்லெப் எனப்படும் இருதய சிகிச்சைப் பிரிவிற்கான (அஞ்சியோகிராம்) இயந்திரம் வர இருக்கின்றது.

அதாவது 2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த இருதய சிகிச்சைப் பிரிவிற்கான இயந்திரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் திடீரென அது களுத்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் கலந்து பேசியிருந்தும், பாராளுமன்றத்திலும் வெளியிலும் எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொண்டும் பலனில்லாமல் அந்த இயந்திரம் களுத்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது நேற்று (02) புதிதாக சுகாதார அமைச்சுக்கு அந்த இயந்திரம் மேலுமொன்று வர இருப்பதாக அறியக் கிடைத்ததையிட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திரகுப்தாவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன். அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அந்த இயந்திரம் தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார். அதேபோன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்களுடனும் உரையாடினேன். அவரும் இந்தத் தேவையை உணர்ந்து கொண்டு அமைச்சரும் செயலாளரும் மட்டக்களப்பிற்கு முன்னுரிமை கொடுத்து அந்த இயந்திரத்தை மட்டக்களப்பிற்குத் தருவதாகத் தொலைபேசி மூலம் உத்தரவாதம் தந்துள்ளார்கள்.

அதற்கு மேலாக ஜனாதிபதியின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியதற்கமைவாக தானும் இவ்விடயத்திற் நூறு வீத ஒத்துழைப்பைத் தருவதாகவும், ஜனாதிபதிக்கு கடிம் எழுதி அதன் பிரதியை வாட்சப் மூலமாகத் தனக்கும் அனுப்புமாறும் தெரிவித்திருக்கின்றார். அந்த வகையில் மேற்சொன்ன மூவரும் அந்த இருதய சிகிச்சை இயந்திரத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தில் இருதய சிகிச்சை செய்பவர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு அல்லது தனியார்துறை வைத்தியசாலைகளையே நாடிச் செல்கின்ற நிலையில் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அந்த இயந்திரம் வருமாக இருந்தால் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தில் வாழும் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு வாய்;பாக இருக்கும்.

அத்துடன் என்சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள். இவ்விடயத்தை அரசியல் ரீதியாகப் பார்க்காமல் அனைவரும் ஒன்றாக நின்று இந்த இயந்திரத்தைக இங்கு கொண்டு வருவதற்கு மேலதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

தற்போது இந்த நாட்டிலே சுகாதாரத் துறை சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட ஒரு துறையாக உள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன.

வைத்திய நிபுனர்கள், வைத்திய அதிகாரிகள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டப்பாடு நிலவிக் கொண்டு வருகின்றது.

கண் வைத்தியம் போன்ற சில நோய்களுக்கு சிகிச்சை செய்யும் போது நோயாளர்கள் பாதிப்படையும் நிலைமை கூட இருக்கின்றது. அத்துடன் சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணனை கூட கொண்டு வரப்பட்டு பாராளுன்றத்திலே எதிர்வரும் வாரங்களில் இதன் மீதான விவாதம் நடைபெற இருக்கின்றது.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடு இன்று ஒரு சுமுகமான நிலைக்கு வந்திருப்பதாக வெளியுலகிற்கு தெரிகின்றதே தவிர நாட்டு மக்கள் இன்னமும் மிகவும் கஷ்டத்திலேயே இருக்கின்றார்கள்.

விலைவாசி அதிகரிப்பு, சம்பளப் பற்றாக்குறை என ஒட்டுமொத்தமாக அரச ஊழியர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை இந்த நாட்டிலே மிகவும் துக்கத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். இதை உணர்ந்து இந்த அரசாங்கம் சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமித்து சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.