;
Athirady Tamil News

ஜி-20 உச்சி மாநாட்டில் சில நாடுகள் பங்கேற்காததால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை : ஜெய்சங்கர் !!

0

இந்தியாவின் புதுடில்லியில் வருகின்ற 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உட்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி-20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

இதேவேளை ஜி-20 அமைப்பின் டில்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதற்கிடையே டில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் அவர்களின் பிரதிநிதிகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது

“ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்காததால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு முன்பு பல்வேறு காலகட்டங்களில் சில அதிபர்களும், பிரதமர்களும் சில காரணங்களுக்காக ஜி-20 மாநாடுகளில் பங்கேற்பதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த நேரங்களில் குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் நிலையை ஜி-20 மாநாட்டில் பிரதிபலித்து இருக்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்கள் அதற்கான தீவிரத்தன்மையை கொண்டிருப்பார்கள்.” என்றவாறு தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.