;
Athirady Tamil News

பெங்களூருவில் தாய், மகன் கொடூர கொலை: போலீசார் விசாரணை!!

0

ஆந்திர மாநிலம், அனந்தபூரை சேர்ந்தவர் நவநீதா (வயது 35). இவருக்கும் கர்நாடக மாநிலம், பகலகுண்டே, ரவீந்திரநாதா குடே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியின் மகன் ஸ்ருஜன் (8). நவநீதா பெங்களுருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நவநீதா கடந்த 2 ஆண்டுகளாக மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே சந்துரு வாடகை வீட்டில் குடியேறினார். அடிக்கடி குடிபோதையில் நவநீதாவிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் தாயும், மகனும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அங்கு நவநீதா, சந்துரு இருவரும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இருவரது பிணத்தையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சந்துருவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.