;
Athirady Tamil News

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக சரிவு!!

0

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்தது. மேலும் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதற்கிடையே இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக மீன் கடைகள், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.