;
Athirady Tamil News

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி” என கூறி ஓட்டு கேட்க முடியாததால் “இந்தியா கூட்டணி”: அமித் ஷா!!

0

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க “இந்தியா கூட்டணி” எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன. பா.ஜ.க.வின் சார்பில் “லோக் சபா பிரவஸ்” எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது: “எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்.” “அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்.” “ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்,” என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.