;
Athirady Tamil News

கனடா வர்த்தக மந்திரியின் இந்திய பயணம் “திடீர்” தள்ளிவைப்பு!!

0

கனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில் இந்தியாவுக்கான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கனடா மந்திரி மேரி எங்கின் இந்தியா பயணம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறும்போது, “இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்” என்றார். ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தன.

இதற்காக கனடா மந்திரி இந்தியாவுக்கு வர இருந்த அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 9, 10-ந்தேதிகளில் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இதில் இந்திய பிரதமர் மோடி-ஜஸ்டின் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்து கோவில் மீது தாக்குதல், இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் ஆகியவை மீது கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார்.

மேலும் காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜி-20 மாநாடு முடிந்த பிறகு விமான கோளாறு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ, கனடா புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அவர் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு சென்றார். ஜஸ்டின் ட்ரூடோ ஜி-20 மாநாட்டின் 2-வது நாள் அமர்வில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் கனடா வர்த்தக மந்திரியின் இந்தியா பயணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.