;
Athirady Tamil News

நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது- கேரள முதல்வர்!!

0

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், ஆனால் தொற்று நோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நிபா வைரஸ் தாக்குதலின் இரண்டாவது அலை உருவாகும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. நிபாவின் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்துவிட்டதாகக் கூற முடியாது. சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

வைரஸை முன்கூட்டியே கண்டறிவது ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்கும். தற்போது 994 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 304 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 267 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. ஒன்பது பேர் கண்காணிப்பில் உள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூட தெளிவான பதிலை அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.