;
Athirady Tamil News

யாழில் பெண் சாமியாரை நம்பி 17 லட்சம் இழந்த இளைஞர்!

0

யாழில் வெளிநாடுசெல்லும் ஆசையில் இளைஞர் ஒருவர், சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், முகவர்களை நாடியபோதும் தனது பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என அவர் அஞ்சியுள்ளார்.

இந்நிலையில் உரும்பிராயில் உள்ள பெண் ஒருவர் சாமியாடி வாக்குச் சொல்வார் என்றும், அவர் சொல்வது அனைத்தும் நடக்கும் என்றும் இளஞரிடம் சிலர் கூறியுள்ளனர்.

பெண் சாமி காட்டிய மோசடி நபர்
அந்த பெண் சாமியாடியிடம் பலர் கூடியிருந்த நிலையில் இளைஞரும், காத்திருந்து தனது பிரச்சினையைக் கூறியிருக்கின்றார். தனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், ஆனால் பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என்ற அச்சமாகவிருக்கின்றது என்றும் கூறிய அவர், அது தொடர்பில் ஆலோசனையையும் பெண் சாமியாரிடம் கேட்டுள்ளார்.

சாமியாடி வாக்குச் சொன்ன பெண்ணும், கண்ணை மூடி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் உன்னை வெளிநாடு அனுப்புவார், நீ வெளிநாடு செல்வது உறுதி என கூறி அனுப்பியுள்ளார்.

அதை நம்பிய இளைஞர் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு 17 லட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். எனினும் காலங்கள் உருண்டனவே தவிர இளைஞர் வெளிநாடு செல்வதாக இல்லை.

பொலிசார் விசாரணை
பணத்தைப் பெற்றுக்கொண்டவரும் சரியான பதிலை வழங்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரை நாடியயதை அடுத்து, பதுளையைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞரின் பணம் தொடர்பில் அவரிடம் விசாரணை செய்தபோது, தனது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டதாகவும் . அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டேன்.

அது தவிர எனக்கு எதுவும் தெரியாது என்று அந்த நபர் கையை விரிக்கின்றாராம். சாமியாடும் பெண்ணின் வாக்கை நம்பி பணத்தை இழந்தவர் தற்போது என்ன செய்வது என்று தெரியாது திண்டாடுகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.