;
Athirady Tamil News

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலை சிறைபிடிக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

0

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரக்கு கப்பல்
கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையைச் சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. ரகிமா என்ற சரக்கு கப்பலில் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன்.

அப்போது மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என 9 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50,000 மட்டுமே வழங்கியுள்ளனர். எனவே சம்பளம் மற்றும் இழப்பீட்டுத் தொகையுடன் ரூ.4.48 லட்சம் எனக்கு தர வேண்டி கப்பல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதுகுறித்து கப்பல் நிறுவனத்திற்கு பலமுறை தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை.

சிறைபிடிக்க உத்தரவு
எனவே அதனைச் சிறை பிடிக்க வேண்டும்” என நந்தகுமார் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் முத்துசாமி ஆஜராகி “எம்.வி. ரகிமா கப்பல் தற்போது மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தனியார் கப்பல் நிறுவனம், மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனைச் சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.