;
Athirady Tamil News

உயிரிழந்த 2 வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்: தந்தையின் நெகிழ்ச்சி செயல்

0

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி, தனது உயிரிழந்த இரண்டு வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாஷேகம் நடத்தியுள்ளார்.

உயிரிழந்த மகள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தரபாண்டியன்- மஞ்சுளா தம்பதியினர்.

இவர்களுக்கு சபரி வாசன் என்கிற மகனும், சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் சக்தி பிரக்யாவுக்கு 2 1/2 வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

செல்லமாக வளர்த்த மகள் உயிரிழந்த சம்பவத்தால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார்.

கோவில் கட்டி கும்பாபிஷேகம்
மகளின் நினைவு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று சிறுக சிறுக பணம் சேர்க்க தொடங்கி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் ஆலயம் கட்டும் பணியினை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மூன்று வருடமாக நடைபெற்ற ஆலய கட்டுமான பணி நிறைவடைந்து இன்று அதற்கான கும்பாபிஷேகம் விழாவையும் நடத்தி இருக்கிறார்.

தனது மகளை அம்மனாக பாவித்து தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து ”ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன்” என்கிற பெயரில் கோயில் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்.

சௌந்தரபாண்டியனில் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

குழந்தையின் தந்தை கூறுகையில்..
இது குறித்து குழந்தையின் தந்தை சௌந்தரபாண்டியன் கூறுகையில், ”தனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன செலவாகும் என்பதை நினைத்து தான் இதை செய்துள்ளேன்.

எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த குழந்தை எனக்கு மட்டுமல்லாமல் இந்த ஊருக்கும் நன்மை செய்யும் என்கிற நோக்கில் இந்த ஆலயத்தை கட்டி உள்ளேன்.

மேலும் வருடா வருடம் இந்த கோயிலுக்கு திருவிழா எடுத்து வழிபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.