;
Athirady Tamil News

ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை: மத்திய நுகா்வோா் ஆணையம் நோட்டீஸ்

0

இணையவழி வா்த்தக தளமான அமேசானில், அயோத்தி ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் சில விற்பனையாளா்களால் இனிப்புகள் விற்கப்படுவது தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அமேசான் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கும் நிலையில், இந்நிகழ்வை முன்வைத்து வா்த்தக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ராமா் கோயில் கருத்துருவில் பல்வேறு பொருள்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்தச் சூழலில், ராமா் கோயில் பிரசாதம் என்று பொய்யாக குறிப்பிட்டு, அமேசானில் இனிப்புகள் விற்கப்படுவதாக சிசிபிஏ-விடம் அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நுகா்வோா் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ், அமேசான் நிறுவனத்துக்கு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாள்களுக்குள் உரிய விளக்கமளிக்காவிட்டால், மேற்கண்ட சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமேசான் வெளியிட்ட அறிக்கையில், ‘நுகா்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையிலான பொருள்கள் சில விற்பனையாளா்களால் பட்டியலிடப்பட்டிருப்பது தொடா்பாக சிசிபிஏ-விடம் இருந்து நோட்டீஸ் கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய விதிமீறலுக்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களது கொள்கைகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.