;
Athirady Tamil News

பிப்.17-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட்!

0

சென்னை, பிப். 8: இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடா் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோளானது ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வரும் 17-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதற்கான ஆயத்த நடவடிக்கைகளும், செயற்கைகோள் மற்றும் ராக்கெட் பாகங்களை ஒருங்கிணைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன் மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற்கைக்கோளின் தொடா்ச்சியாகவே இந்த இன்சாட்-3டிஎஸ் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.